search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசிய காட்சி.

    பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் கடும் தாக்கு

    பதவிக்காக தனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி என்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மககள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. குமாரசாமி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி வரவேற்றார்.

    கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எனது சிறிய எதிரி அ.ம.மு.க. என்று தமிழக முதல்வர் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் நடிகர் வடிவேலு இல்லை என்ற குறையைப் போக்கும் அளவுக்கு காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு தங்களது கட்சி பெரிய கட்சி என்கிறார் முதல்வர்.

    அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் நீங்கள் இதற்கு முன்பு எங்கே உறுப்பினராக இருந்தீர்கள் என்ற கேள்வி உள்ளது. இதற்கு அ.தி.மு.க.வில் இருந்தேன் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் குட்டி எதிரி என்றால் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுப்பது ஏன்? எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பயந்துதான் அனுமதி மறுக்கிறீர்கள். நீதிமன்றம் சென்ற பிறகே நாங்கள் கூட்டத்துக்கு அனுமதி வாங்க முடிகிறது.

    குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து சசிகலா காலில் விழுந்து வணங்கினார் எடப்பாடி பழனிசாமி.


    பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி இன்று என்னை குட்டி எதிரி என்கிறார். நான் அம்மாவின் குட்டிதான். அம்மா 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன். கழுவிய கை காயும் முன் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் யார் என்று இந்திய நாடே பார்க்கும் அளவுக்கு செய்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க.வுக்கு காங்கிரசுடன் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ எடப்பாடியுடன் கூட்டணி இருப்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் நபர்களுக்கு ஒப்பந்தப்பணி கொடுக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீதிமன்றத்தில் வருகிற 31-ந் தேதி வழக்கு வருகிறது. நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

    இந்த ஆட்சி மணல் கொள்ளையால் நடக்கிறது. தமிழகத்தில் மணல் கொள்ளை நிறுத்தப்பட்டால் ஆட்சி முடிவுக்கு வரும். எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    Next Story
    ×