search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் 1 கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை - விவசாயிகள் கண்ணீர்
    X

    பாவூர்சத்திரத்தில் 1 கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை - விவசாயிகள் கண்ணீர்

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி, வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அதிகளவு கொண்டு செல்லாததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்பனையானது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெய்க்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தர பாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப் பேரி, ஆவுடையானூர், அரியப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பல்வேறு வகை காய்கறிகள் பயிரிட்டுள்ளன.

    தக்காளி மட்டும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அப்படி விற்கப்படும் தக்காளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாற்றுப்பாவி 20 நாட்கள் கழித்து வயல்களில் நடவு நட்டு 60 நாட்கள் கழித்து தக்காளிகள் ஓரளவு விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதாலும், ஒவ்வொரு நாள் வெயில் மற்றும் சீதோஷ்ண நிலை மாறி வருவதால் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் இலை கருகல் மற்றும் மொட்டை நோய் ஏற்பட்டு செடிகள் பட்டுப்போய் காணப்பட்டது.

    நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு தக்காளியை விளைவித்தனர். இதனால் தக்காளி மகசூல் தற்போது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் மகசூலுக்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டில் விலை ஒரே நிலையில் இல்லாமல் விற்கப்படுகிறது.

    தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. வழக்கமாக கேரளாவுக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டு செல்லப்படும். ஆனால் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் அங்கு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மிக குறைவான அளவிலேயே காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் தக்காளியும் அடங்கும். பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் கேரளாவிற்கு அனுப்பபடாததால் அவை நெல்லை மார்க்கெட்டுகளில் தேக்கமடைந்துள்ளன. கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15-க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் 20 கிலோ கொண்ட ஒரு டப்பா தக்காளி ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனையானது.

    இந்த விலை இறக்கத்தால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளிகள் கனிந்து நிலங்களில் விழுந்து அழுகி பாழாகி போகிறது. இதைத் தொடர்ந்து நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்கப்பட்டது.

    கடந்த வருடம் நாற்று பாவி, நடுவை நட, களை எடுக்க, மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது. ஆனால் இந்த வருடம் தக்காளி பயிரிடப்பட்ட வயல்களில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் தெளித்ததால் இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு மேல் செலவாகி விட்டது. இவ்வளவு பணம் செலவழித்தும் மார்க்கெட்டில் தக்காளிக்கு விலை இல்லாத காரணத்தினால் செலவழித்த தொகையை எடுக்க முடியுமா என அச்சத்தில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×