search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு போராட்டம் - சென்னையில் பஸ், ரெயில்கள், ஆட்டோக்கள் ஓடியது
    X

    முழு அடைப்பு போராட்டம் - சென்னையில் பஸ், ரெயில்கள், ஆட்டோக்கள் ஓடியது

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் பஸ், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த பந்த் போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஆதரவு தெரிவித்திருந்தன. ஆளும்கட்சியான அ.தி.மு.க. மட்டும பந்தை ஆதரிக்கவில்லை.

    இருப்பினும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததால் தமிழகத்திலும் முழு அடைப்புக்கு பெருமளவு ஆதரவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    சென்னையில் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின. ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. தனியார் பள்ளி வேன்களும், வழக்கம் போல ஓடின. தமிழகம் முழுவதும் இதே நிலையே நீடித்தது.

    சென்னையில் 38 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன.



    கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. இதனால் மார்க்கெட்டில் உள்ள 2400 கடைகளும் இன்று திறக்கப்பட்டு இருந் தன. கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரையில் நள்ளிரவு 2.30 மணியில் இருந்தே பரபரப்பாக செயல்பட தொடங்கி விடும். அதே பரபரப்பு இன்று காணப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் என அனைத்தும் திறந்து இருந்தன.

    பந்த் போராட்டத்திற்கு வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கடைகளை மூடி இருந்தனர்.

    விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மாநகர் முழுவதும் முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியை முடுக்கிவிட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    Next Story
    ×