search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலினும்-தினகரனும் சந்தித்ததாக கூறுவது கற்பனை - துரைமுருகன் பேட்டி
    X

    மு.க.ஸ்டாலினும்-தினகரனும் சந்தித்ததாக கூறுவது கற்பனை - துரைமுருகன் பேட்டி

    மு.க.ஸ்டாலினும்-தினகரனும் சந்தித்ததாக கூறுவது கற்பனை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MKStalin #DMK #TTVDhinakaran

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மு.க.ஸ்டாலினும்-டி.டி.வி. தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த போது அரசியல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனை மேற் கொண்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா? ஓட்டலில் கூட தங்கக்கூடாதா? உடனே சதியா?

    கே:- ஜெயலலிதா- கருணாநிதி காலத்தில் கூட இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது கிடையாது. தொண்டர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி வெவ்வேறு இடங்களில் தான் தங்கி இருப்பார்களே தவிர ஒரே ஓட்டலில் தங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    ப:- எங்கும் மோதல் ஏற்படாது. அடிதடியும் ஏற்படாது. அவர் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக கற்பனைக்காக சொல்லி இருப்பார்.


    கே:- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 18 தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இப்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா? ம.தி.மு.க. புதிதாக உங்களிடம் வந்துள்ளதே அந்த கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா?

    ப:- முதலில் தேர்தல் வருகிறதா? என்று பாருங்கள். தேர்தல் வந்ததற்கு பிறகு உட்கார்ந்து பேசுவோம். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்பதை எங்களுடன் கூடி பேசி தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவை அறிவிப்பார்.

    கே:- இப்போது இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லையா?

    ப:- மழை கொட்டோ கொட்டும் என்று சொன்னார்கள். மழையே வரவில்லை. நான் எப்படி தேர்தல் வரும், வராது என சொல்லமுடியும். வானிலை அறிக்கையே பொய்த்து போகிறது. அரசியல் நிலை என்னவாகும்.

    கே:- டெங்கு, சிக்குன் குனியா 100 சதவீதம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் இருந்தது. இப்போது 25 சதவீதம் தான் வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    ப:- எங்கள் ஆட்சியில் டெங்கும் தெரியாது. பங்கும் தெரியாது. வருடத்துக்கு ஒரு முறை வரும் டெங்கு இப்போது விதவிதமாக வருகிறது. எலி காய்ச்சல் முதல் எல்லா காய்ச்சலும் இவர்கள் ஆட்சி காலத்தில் தான் வருகிறது. அரசியல் காய்ச்சல் இவர்களுக்கு வந்ததால் இந்த காய்ச்சல் எல்லாம் வருகிறது.

    கே:- எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தூய்மைப்பணி, ஆய்வு போன்றவற்றை நடத்துவதாக அமைச்சர்கள் குறைகூறுகிறார்களே?

    ப:- நிலவேம்பு கசாயம் கொடுப்பது நல்லது தான். அதை வரவேற்க வேண்டியது தான். அரசாங்கம் செய்ய முடியாததை தானே நாங்கள் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK #TTVDhinakaran

    Next Story
    ×