search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை

    வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 43). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கு சுதா என்ற மனைவியும், ஜாஸ்மின் (22) என்ற மகளும், டேனியல் (14) என்ற மகனும் உள்ளனர். ஜாஸ்மின் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் வரன்கள் தேடினர்.

    தனக்கு திருமணம் செய்து வைப்பதை அறிந்த ஜாஸ்மின் தற்போது எனக்கு திருமணம் வேண்டாம் என கூறினார். ஆனால், பெற்றோர் வடலூரை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    இதில், இருவீட்டு சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ந் தேதி பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் ஜாஸ்மின் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், தான் மேலும் படிக்க வேண்டும் என கூறினார்.

    ஆனால், பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். கடந்த 31-ந் தேதி ஜெயசீலன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.

    மனைவி சுதா மகள் திருமணம் சம்பந்தமாக வெளியே சென்றார். ஜாஸ்மினும் அவரது தம்பி ஹென்றியும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது ஜாஸ்மின் திடீரென அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் அவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை கண்ட அவரது தம்பி ஹென்றி கதவை தட்டினார். ஆனால், கதவு திறக்கப்படாததால் அவர் கூச்சலிட்டார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கதவை உடைத்து ஜாஸ்மினை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாஸ்மின் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

    இதுகுறித்து ஜெயசீலன் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×