search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பேருந்து - வேன் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
    X

    தேனி அருகே பேருந்து - வேன் மோதல்: 6 பேர் உயிரிழப்பு

    தேனி அருகே வேன் மீது பஸ் மோதிய விபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 6 பேர் பலியானார்கள்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் வெற்றியரசன் (வயது 50). இவருடைய மகள் பவித்ரா (28). இவருக்கு திருமணமாகி 3 வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான பவித்ராவுக்கு நேற்று போடியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெற்றியரசன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் போடிக்கு சென்றார். வேனை செல்வக்குமார் (23) ஓட்டினார்.

    வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், பவித்ராவை அழைத்துக்கொண்டு வெற்றியரசனின் குடும்பத்தினரும், உறவினர்களும் வேனில் தேனிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். போடி-தேனி சாலையில், கோடாங்கிபட்டி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தனியார் பஸ், வெற்றியரசன் குடும்பத்தினர் வந்த வேன் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றியரசன், அவருடைய அண்ணன் சிற்றரசன் (55), உறவினர்கள் சரஸ்வதி (65), பேச்சியம்மாள் (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேனில் பயணம் செய்த கர்ப்பிணி பவித்ரா, அவருடைய மகள் யாசிகா, லீட்டா (10), சுருளியம்மாள் உள்பட 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து கொண்டு வந்த உணவுகள், வளையல் உள்ளிட்ட பொருட்கள் சாலையில் சிதறிக்கிடந்தன.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், லீட்டா, சுருளியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.

    விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் கண்ணன் (35) தப்பி ஓடிவிட்டார். பின்னர், அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விபத்து நடந்ததை அறிந்ததும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விபத்தை ஏற்படுத்திய பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த போலீசார், பஸ் கண்ணாடியை உடைத்ததாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். உடனே பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    விபத்தில் பலியான சிற்றரசன், வெற்றியரசன் இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். விபத்து நடந்தபோது, போடியில் இருந்து தேனி நோக்கி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். விபத்தில் படுகாயங்களுடன் கிடந்தவர்களை பார்த்ததும், தனது காரை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவரும், அவருடன் வந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×