search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிறுதானியம்
    X
    சிறுதானியம்

    மாவட்டங்கள்தோறும் சிறுதானிய விழா- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

    அறுவடை செய்த விளைபொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர்களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

    விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23-ம் ஆண்டிலும் வழங்கப்படும்.

    அளவில் சிறுத்து ஊட்டத்தில் பெருத்து உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழிமொழியும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுசபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

    சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் திருவண்ணாமலை,  சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டும் உருவாக்கப்படும்.

    சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் சிறுதானிய திருவிழா மாவட்ட அளவில் நடத்தப்படும்.

    2022-23-ம் ஆண்டில் 92 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை சுய உதவிக்குழு மகளிர் இடையே ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், 2022-23 ஆம் நிதியாண்டில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனைசெய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக்காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்புக்கு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர்.

    கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள், ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில்கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ரா லிக்டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசுநிதியில் செயல்படுத்தப்படும்.

    சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்தும் துல்லியமாகவும் மேற்கொள் ளும் வகையில் அமராவதி, அறிஞர் அண்ணா, செய்யார், செங்கல்ராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி- 1,  கள்ளக்குறிச்சி-2, எம்.ஆர்.கே., மதுராந்தகம், பெரம்பலூர், சுப்பிரமணியசிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மொத்தம் மூன்று கோடி ரூபாய் மாநில அரசுநிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரே சர்க்கரை ஆலையான நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்புபற்றாக்குறை காரணமாக கடந்த 2016-17 அரவைப் பருவம் முதல் இயங்காமல் இருந்து வருகிறது.
    விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும்.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பினைத் துல்லியமாக எடையிடும் வகையிலும்  கரும்பிற்கான விலையினை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிடும் வகையிலும், 15 கூட்டுறவு, பொது சர்க்கரை ஆலைகளில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் மாநிலஅரசு நிதி ஒதுக்கீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள எடைத்தளங்கள் கணினி மூலம் தானியங்கி முறைக்கு மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கரும்பு எடை விவரங்கள் விவசாயிகளுக்கும்,
    வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், குறுஞ்செய்தியாக உடனுக்கு டன் அனுப்பப் படுவது உறுதி செய்யப்படும்.

    உழைப்பின் பயனாக உற்பத்தி செய்தவை தூறலில் நனைந்தால் கண்களில் மழை உருவாகும். அறுவடைசெய்த விளைபொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர்களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×