search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 நாட்களில் 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் பயணம்
    X

    விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 நாட்களில் 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் பயணம்

    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை விடுமுறை நாளான கடந்த 11-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 642 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையையொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 5 ஆயிரத்து 885 பேரும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுமார் 10 ஆயிரம் பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    அதேபோல வட்டக்கோட்டைக்கு இயக்கப்படாமல் முடங்கி கிடந்த சொகுசு படகுகள் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 345 பேர் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். நேற்று 75 பேரும், நேற்று முன்தினம் 136 பேரும், 10-ந்தேதி 134 பேரும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்துள்ளனர்.

    ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி வட்டக்கோட்டைக்கு கடந்த 3 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×