search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் பெயிண்டர் உள்பட 3 பேர் பலி
    X

    கோவையில் பெயிண்டர் உள்பட 3 பேர் பலி

    • மகேஸ்வரன், ஜெயக்குமார் மீது கட்டுப்பாடற்ற லாரி மோதியது.
    • 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் அருகே உள்ள வி.சி.காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது46). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (38) என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த மகேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோர் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேருநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (78), தர்மபுரியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் 2 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள்சாமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    இருகூர் அருகே உள்ள எல்.அன்டு.டி. பைபாஸ் ரோட்டில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×