search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேதுபாவாசத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
    X

    உளுந்து சாகுபடி.

    சேதுபாவாசத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

    • அறுவடை இயந்திரம் மூலம் நெல்லை அறுவடை செய்தால் உளுந்தின் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெற முடியும்.
    • நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து அதிக பயன்பெறலாம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன பகுதியான தஞ்சையில் நஞ்சை சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு நெல் தரிசில் பயறு வகை பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

    நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு மார்கழி, தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளலாம். வம்பன் 8,9,10 உள்ளிட்ட உளுந்து விதை ரகங்கள் ஏற்றவையாகும்.

    காவிரி ஆற்றுப் பாசன பகுதியில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள போது, உளுந்தை ஏக்கருக்கு 8 கிலோ விதை என்ற அளவில் மண்ணில் ஈரப்பதம் 33 சதவீதம் முதல் 38 சதவீதம் இருக்கும் பொழுது விதைத்து, பின் மூன்றில் இருந்து நான்கு நாட்களில் செயின் பொருத்திய அறுவடை இயந்திரம் மூலம் நெல்லை அறுவடை செய்தால் உளுந்தின் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெற முடியும்.

    பயறு வகை பயிர்களில் இலை வழி உரம் இடுதல் ஒரு முக்கிய தொழில் நுட்பமாகும். நெல் தரிசில் அடியுரம் இட முடியாத நிலையில் இலைவழி உரமாக தெளிப்பது மகசூலை அதிகரிப்பதற்கு வழி கோலுகிறது.

    காய்கள் அதிகம் பிடித்து மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் கொண்டு இலைகளின் நன்கு படும்படி காலை, மாலை வேளையில் பூக்கும் தருணத்தில் (விதைத்த 25ஆம் நாள்) ஒரு முறையும் மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் (விதைத்த 40ம் நாள்) மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

    90 சதவீதம் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவு டன் செடிகளை தரை மட்டத்திற்கு அறிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து பின்பு வெயிலில் காயவைத்து மணிகளை பிரித்து எடுக்க வேண்டும் என்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து அதிக பயன்பெறலாம்.

    மேலும் குருவிக்கரம்பை மற்றும் பெருமகளூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வம்பன் 8 ரக உளுந்து விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×