search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முக்கிய சாலை சிதிலமடைந்ததால்   பேருந்து போக்குவரத்தை நிறுத்திய நிர்வாகம்   -மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் தவிப்பு
    X

    மண் சாலையாக மாறியுள்ள மலையூர் காடு,மூலக்காடு சாலை.

    முக்கிய சாலை சிதிலமடைந்ததால் பேருந்து போக்குவரத்தை நிறுத்திய நிர்வாகம் -மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் தவிப்பு

    • 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது.
    • அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், குறுக்கு பள்ளம் உள்ளிட்ட ஐந்து கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு செல்லும் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது. தொடர்ந்து அதே சாலையில் அரசு பேருந்துகளும் பயணித்து வந்தன.

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து வந்த வழித்தட எண் 24, 8, 10 அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    இப்பகுதியில் இருந்து மலையூர் காட்டிற்கு செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து வசதிக்காக இரண்டு மாதங்களாக தவித்து வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டும் இது நாள் வரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறி தகுதியற்றதாக உள்ள சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளங்களுக்கு மண்ணை கொட்டி சீரமைத்துள்ளார். அதில் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன.

    அப்பகுதியில் உள்ள அனைவரும் வேறு வழியின்றி நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

    அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த தங்களுக்கு தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் மண்சாலையாக மாறி உள்ள சாலையை சீரமைத்து கொடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×