என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறை சார்பாக எல்லையில் மின்வேலிகள் அமைக்க வேண்டும்- விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு பகுதியில் காரமடை வனத்துறை சார்பாக மனித -வனவிலங்குகள் மோதல் குறித்தும், மின்வேலிகள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு காரமடை வனச்சரகர் திவ்யா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அதிகாரிகள் விளக்கம் கொடுத்து விவசாயிகளை சமாதானம் செய்தனர்.
கூட்டத்தில் வன உயிரின ஆர்வலர் அப்துல் பேசியதாவது:-
இயற்கையை நாம் எந்த அளவுக்கு அழிக்காமல் பாதுகாக்கிறோமோ அந்த அளவுக்கு இயற்கை நம்மை பாதுகாக்கும். வன எல்லைப் பகுதியில் யானைகளுக்கு பிடித்த பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்கக் கூடாது.
இயற்கையை அழித்தோம் என்றால் வனவிலங்குகள் அழிந்துவிடும். வனவிலங்குகளை அழித்தால் இயற்கை அழிந்து விடும். இந்த இரண்டும் அழிந்தால் மனித இனம் அழிந்து விடும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யக்கூடியவை.
வரக்கூடிய காலங்களில் இயற்கையோடு வனவிலங்குகளோடு ஒன்றி வாழக்கூடிய வழி வகைகளை நாம் பார்க்க வேண்டும்.
மழை இன்று பெரிய பிரச்சினையாக உள்ளது. சரியான காலகட்டங்களில் சரியான அளவு பெய்வது இல்லை. மழை தாக்கம் குறைவாக உள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் மரங்களை அழித்தது தான். மரங்கள் வளர்த்து இயற்கை பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
காரமடை வனச்சரகர் திவ்யா பேசியதாவது:-
மின்வேலி அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தூரம் மின்வேலி அமைக்கப்பட வேண்டும், எவ்வளவு இடைவெளி விட வேண்டும், எவ்வளவு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.
மின்வேலிகளை அமைத்துள்ளவர்கள், இனி அமைப்பவர்கள் எங்களிடம் தெரிவித்து அதற்கான உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றார்.கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-
யானைகள் வராமல் இருக்க தோட்டத்தில் மின் வேலிகளை அமைக்க அரசு கூறி உள்ளது. பணம் உள்ள விவசாயிகள் மின்வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பணம் இல்லாத ஏழை விவசாயிகள் எப்படி வேலிகளை அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதற்கு பதிலாக வன எல்லையில் வனத்துறை சார்பாகவே மின்வேலிகளை அமைத்து யானையை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். தேனீ வளர்ப்பு மூலமாக யானைகள் வராது என கூறப்படுகிறது. வனத்துறையினர் தேனீக்களை வளர்த்து யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடுகளை உடனே பெற்று தர வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்