search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீட்டின் மேற்கூரையை தூக்கி வீசி யானைகள் அட்டகாசம்
    X

    வீட்டின் மேற்கூரையை தூக்கி வீசி யானைகள் அட்டகாசம்

    • தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் யானை மடுவு, அட்டுக்கல், குப்போபாளைம், நரசீபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு நுழையும் யானைகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், வள்ளியம்மன் கோவில் வீதி அருகே உள்ள ஆர்.வி.எஸ். தோட்டம் பகுதிக்குள் நுழைந்தது.

    இந்த தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார்.

    தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், வீட்டின் அருகே சென்றதும், அங்கிருந்த சிமெண்ட் சீட்டை உடைத்து தூக்கி எறிந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையை தூக்கி எறிந்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்ட, பாண்டியம்மாள் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது 2 யானைகள் வெளியில் நின்றிருந்தன. இதை பார்த்ததும் அச்சத்தில் உறைந்த அவர்கள் சத்தம் எழுப்பினர்.

    இவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், வெளியில் யானை நிற்பதை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து அங்கு முகாமிட்டு இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் சைரன் எழுப்பி, அங்கிருந்த விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 யானைகளில் ஒரு யானை ஆவேசம் அடைந்து, முன்னேறி வந்து, தன்னை விரட்டுபவர்களை துரத்தியது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் யானை அருகில் செல்ல பயந்து, சற்று தூரத்தில் நின்றபடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்ற யானை, அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. அப்போது அங்குள்ள வெள்ளிங்கிரி என்பவரது வீட்டின் ஜன்னல் கதவை பிடித்து இழுத்து சேதப்படுத்தியதுடன், அருகே இருந்த மின் கம்பத்தையும் இடித்து கீழே தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று, அடிவார பகுதியில் நின்று கொண்டன.

    தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனத்திற்குள் செல்ல மறுத்து, ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மின் விளக்குகள் சரியாக எரியாததால் இரவில் வெளியில் வரவும் அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×