search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அட்டகாசம் செய்த பிரபல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
    X

    அட்டகாசம் செய்த பிரபல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

    • ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் வீரவீதியை சேர்ந்த மருதமுத்து மகன் பரத் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வம் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20). இவர்கள் 3 பேரும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    அதே போன்று 3 பேரும் சேர்ந்து கூலிப்படையாக செயல்பட்டு சிவக்குமார் என்பவரை கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சங்கர் மகன் சசிக்குமார் என்பவர் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சவுந்திரராஜ் என்பவரை மிரட்டி ரூ.1,600 பறித்துக்கொண்டார். இவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (24). இவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள பரத், சாமுவேல், பாலமுருகன், நந்தகுமார், சசிக்குமார் ஆகிய 5 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்

    Next Story
    ×