search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 நாட்களில் மாடு முட்டி 3 பேர் பலியான பரிதாபம்
    X

    4 நாட்களில் மாடு முட்டி 3 பேர் பலியான பரிதாபம்

    • அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாயன் கவுண்டனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. இவர் ஊர்கவுண்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே உள்ள புலியரசி கிராமத்தில் கடந்த 17-ந் தேதி எருது விடும் விழா நடந்தது. அதை பார்க்க ராமசாமி சென்றார்.

    அந்த நேரம் ஓடி வந்த மாடு ஒன்று ராமசாமியை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி நேற்று இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 17-ந் தேதி வேப்பனப்பள்ளி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் மாடு முட்டியதில், ராஜி (72) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்து இறந்தார். அதன் தொடர்ச்சியாக அதே நாளில் வி.மாதேப்பள்ளியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில், நாடுவனப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் பவன்குமார் (11) பரிதாபமாக இறந்தான்.

    அதே போல தற்போது புலியரசியில் மாடு முட்டியதில் விவசாயி ராமசாமி பலியாகி உள்ளனர். வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×