search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வைகாசி விசாக 7-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா
    X

    வைகாசி விசாக 7-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய உரையும் அதைத் தொடர்ந்து இரவு 7மணிக்கு பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.


    ஊர்வலத்துக்கு முன்னால் செண்டை மேளம், சிங்காரி மேளம், கேர ளதையம்ஆட்டம், பெண் களின் நாதஸ்வரகச்சேரி போன்றவை இடம் பெற்றி ருந்தன. கோவிலில்இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.


    வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். இந்த 7-ம்நாள் திருவிழா நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, 7-ம் திருவிழா மண்டகப்படி கட்டளை தாரர்கள் அய்யப்பன், சந்திரன், கண்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், உள்பட திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.


    8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணை, பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது அதன் பின்னர் 8-30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது.


    அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×