search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகுதியில் 12 சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    கன்னியாகுமரி பகுதியில் 12 சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான 5 1/2 அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்துள்ளது சிறப்பாகும். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதை யொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்து வாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுத முடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் பிரதேசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×