search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தூர் அருகே விபத்து- 3 பக்தர்கள் பலி
    X

    சாத்தூர் அருகே விபத்து- 3 பக்தர்கள் பலி

    • லாரி பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • லாரி டிரைவர் மணிகண்டன் என்பவரை போலீசா கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

    கடந்த 2 வாரங்களாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் மூன்றாவது வெள்ளியான இன்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். 3, 4, 5 என குழு குழுவாக அவர்கள் நடந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சாத்தூர் அருகேயுள்ள நல்லி பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து சிவகங்கை நோக்கி சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த லாரி திடீரென்று கட்டுப்பாடடை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது அந்த லாரி பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ் (வயது 35), பவுன்ராஜ் (45), முருகன் (45) ஆகிய மூன்று பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த பாதயாத்திரையாக வந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அந்த வழியாக வந்த வாகனங்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சிமெண்டு லாரி டிரைவர் மணிகண்டன் என்பவரை போலீசா கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    ஆடி மூன்றாம் வெள்ளிக்கு பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்த 3 பக்தர்கள் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×