search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது.
    • கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்?

    மதுரை:

    தி.மு.க. ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகிததார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தொண்டர்கள் பொதுமக்களுக்கு நேரில் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், அதனை நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அ.தி.மு.க. அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான அன்று, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

    கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின், ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

    நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்?

    உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல, அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவில் உள்ளது. காளிமுத்து கூறியது போல கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகள் கடும் உழைப்பில் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். யாரது உள்ளடி வேலையில் மூன்றாவது முறையாக சாதனை படைக்க இருந்த எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார்.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, தொண்டர்கள் எடப்பாடியுடன் நின்ற காரணத்தினால் அ.தி.மு.க.வை முழுமையோடு எடப்பாடி வழி நடத்துகிறார். 2 கோடி தொண்டர்கள் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

    33 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர்கள் தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி கொள்கிறார். ஆனால் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களது மக்கள் படுகின்ற கஷ்டத்திற்கு தீர்வு காண ஏதாவது முயற்சி செய்தாரா? கல்வியிலே, பொருளாதாரத்திலே பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.

    அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடடிக்கை எடுத்தார். இந்த சாதிய பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்துகிறாரே தவிர நம் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

    அ.தி.மு.க.வில் மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்? ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்று இருக்கிறார். அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து, பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

    காலமும், அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சசிகலாவிடம் யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

    கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை நகர் பகுதிக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்மட்ட மேம்பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை செய்து இருக்கிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் தி.மு.க. மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கலைஞர் பெயரில் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமே கட்டியுள்ளனர்.

    மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வீதிவீதியாக சென்று வாக்குகள் கேட்டோம். வேட்பாளரை வானுயர புகழ்ந்தோம். ஏழைகளின் மருத்துவர் மக்களின் மருத்துவர் என்றெல்லாம் கூறினோம். அவரது மருத்துவமனைக்கு சென்றால் இலவசமாக ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று கூட கூறினோம். ஆனாலும் மதுரை மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை கடை பிடித்துள்ளனர். சிறுபான்மை மக்கள் ராகுல் காந்திக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் பிரதமர் மோடிக்கும் வாக்களித்ததால் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சாணக்கியர் என்பதை தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்து காட்டுவோம்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பரிசாக மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு மக்களுக்கு தந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருப்பு சட்டை போட்டுக்கொண்டு போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார். மேலும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு வரிச்சுமைகளை தந்து வருகிறார். இதனை கண்டித்து வருகிற 23-ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அ.தி.மு.க. நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல.
    • 2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்.

    மதுரை:

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். 4 1/2 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தினார்.

    * பாரத பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டினார்.

    * பாராளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும், அதிமுக மீண்டும் அரியணை ஏறும்.

    * யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே தோற்றுள்ளனர்.

    * அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மக்கள் எங்கள் பக்கம்.

    * 2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்.

    * அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு "Wait and See" என்று கூறினார்.

    • எம்.பி. சு வெங்கடேசன், கேரள எம்.பி A.A. ரஹீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி மற்றும் சில கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.

    மதுரையில் நேற்று ஜூலை 14, 2024 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காந்தி அருங்காட்சியகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு(DYFI) மாநில குழு சார்பாக நடத்தப்பட்ட 'காதலைப் போற்றுவோம்'என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மதுரை எம்.பி. சு வெங்கடேசன் உள்ளிட்ட பல கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆணவக் கொலை உள்ளிட்ட பல காரசாரமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நிகழ்ச்சியில் பேசிய மதன் கௌரி, ஓட்டுப் போட்டாலும் போடாமல் விட்டாலும், நியாய தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் கம்யினிஸ்டுகள் என்று புகழாரம் கூறினார். மேலும் மதுரையின் ஒரு சிறப்பம்சமாக காசு கொடுக்காமல் தேர்தலில் நின்ற எம்பியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் என்று கூறினார். நாம் தெய்வமாக வணங்கும் மீனாட்சி அம்மன் கூட இமயமலை சென்று அங்கு ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்ததாகவும், மீனாட்சி அம்மன் அப்போதே சாதியை எதிர்த்து உள்ளார் என்பதையே காட்டுவதவாத தெரிவித்தார்.

    கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம். ஆனால் இன்னும் ஆங்கிலத்தில் 'ஹானர் கில்லிங்' என்றே கூறப்பட்டு வருகிறது, அதில் பெருமை எதுவும் இல்லை. என்னுடைய சேனலில் ஆணவக் கொலைகளை நான் குறிப்பிடும் போது இனி 'அடாசிட்டி கில்லிங்' என்றே கூறுவேன், அது ஆணவக் கொலைகள் தான், கௌரவக் கொலைகள் கிடையாது என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

    • இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.
    • போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை என்று அதனால் விசாரணை அதிகாரியை மாற்றுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாக கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

    இந்த வழக்கின் பின்னணியானது கடந்த 2019ஆம் நடைபெற்ற நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பலர் சேந்திருக்கிறார்கள். தேனி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சென்னை மாணவர் உதிப் சூர்யா என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த போது பெரும் அதிர்ச்சி வெளியானது. 2019 ஆண்டு தேர்வில் உத்தர பிரதேசம், டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுந்திய சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகள் கண்ணபிண்ண என செய்திகளை வெளியிடுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அதற்கான ஆதாரங்களை காண்பித்தார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்று கூறினார். மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    அதுபோக நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

    மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆகும் நிலையில், மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது.
    • யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி.

    தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, "தான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலை தரப்பில் கூறப்பட்டது.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது என்றும் சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா ? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது என்றும் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    மதுரை:

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது., பெருந்தலைவர் காமராஜர் சிலையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் ரூ.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.?

    சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.?

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.

    சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் 2-வது இடம் பெற்றோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதியை வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடவில்லை என தான் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.

    நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டுக் கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம், கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தார்கள். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?

    குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்.

    மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை"

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில் தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை விரைவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது.
    • கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை விரைவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனை தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    • ஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம்.
    • பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அ.ம. மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது எனது விருப்பம். என்ன காரணத்திற்காக இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டது என ஆராய்ந்து அதன் பயன் முழுமையடையும் வண்ணம் தொடர்ந்து கள்ளர் பள்ளிகளை அதன் சீரமைப்புத்துறையுடன் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை கலாசாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக அமைய போகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால், தி.மு.க.விற்கு எதிராக பேசுகின்ற எதிர் கட்சியை சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.


    இன்று நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை கைது செய்து பின்னர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை நாம் பார்க்கிறோம். அரசுக்கு எதிராக பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களை பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய்திறந்தால் நாங்கள் கைது பண்ணுவோம் என மிரட்டுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே பயப்பட மாட்டார்கள்.

    ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பார்த்து பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போடவேண்டும். அதை விட்டுவிட்டு தி.மு.க.வை பற்றி பேசுவதை தான் வன்கொடுமை சட்ட அளவிற்கு கைது செய்வோம் என பேசுகிறார்கள்.

    பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது, அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். சசிகலாவின் அ.தி.மு.க இணையும் என்ற கருத்து பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் விதவிதமாக நடந்து வருகிறது. மோசடி குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்கள் வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அப்படி ஒரு மோசடி சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது.

    அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ×