search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாடகை கார் வந்தது.

    அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை காரில் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பணத்தை பறிமுதல் செய்ததும், வாகனத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது.

    இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பணம் வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவருவோரிடம் சம்பந்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி பறக்கும்படை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகனத்தணிக்கை சோதனை நடத்தி வாகனங்களில் செல்வோர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணக்கட்டுகளை பறிமுதல் செய்து வருகிறோம்.

    இதன் ஒருபகுதியாக ஊட்டி சட்டசபை தொகுதியில் ரூ.4,84,500, கூடலூர் தொகுதியில் ரூ.51,18,400, குன்னூர் தொகுதியில் ரூ.17,98,870 என நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.74,1770 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பவானி சாகர் தொகுதியில் ரூ.49,6238, மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.8,40,800, அவிநாசி தொகுதியில் ரூ.16,36 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 808 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
    • நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

    • தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.
    • குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கெரடா மட்டம். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்காக அரசின் சார்பில் 90 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வீடுகளில் 36 வீடுகளில் மாற்றுத்திறனாளிகளும், மீதமுள்ள 54 வீடுகளில் கெரடாமட்டம் சுற்று வட்டார பகுதிகளில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக குடியிருக்க அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்கள் இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.

    எனவே தங்களுக்கு வேறு பகுதியில் அரசின் சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    மக்களின் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, கிராம மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் கிராம மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட நிர்வாகத்துக்கு இதுகுறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூபாலன் தலைமையிலான குழுவினர், கோழிக்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரமேஷா என்பவரை சோதனை செய்து, அவரிடம் ரூ.1 லட்சமும், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் ரூ. 1.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் தொரப்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா மற்றும் எஸ்.எஸ்.ஐ., திருக்கேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகஷீர் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2.29 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததாக சத்தியம் என்பவரிடமிருந்து, ரூ.99 ஆயிரமும், அஷ்ரப் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    முதுமலை கார்குடி பகுதியில் நடந்த சோதனையில், எர்ணாகுளத்தை சேர்ந்த தாமஸ் என்பவரிடமிருந்து ரூ.94 ஆயிரமும், மாக்கமூலா பகுதியில் நடந்த சோதனையில், மலப்புரம் ஷாஜி என்பவரிடமிருந்து, 3.95 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.11.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தொகை அனைத்தும், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூடலுார் பகுதியில் இதுவரை மொத்தம் ரூ.30.91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கூடலூரைசேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை சோதனை மேற்கொண்டனர். அவரிடம் ரூ.52 ஆயிரத்து 250 பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • வெடிகுண்டு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

    ஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    பிரபல தனியார் பள்ளிகளுக்க இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே நேற்று கோவையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
    • தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

    குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.

    அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.

    குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
    • வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்பகுதியில் பற்றியெரியும் தீயை, கடந்தாண்டு போல ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை அணைக்காமல் சென்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா (வயது 65), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
    • புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், பதவியேற்ற பின் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதாவினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். என் மண், என் மக்கள் தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். பா.ஜ.க.வின் இந்த யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு உள்ளது. குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல தி.மு.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருகிறது.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற, லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலர் குற்றம் சாட்டினார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி மார்க்கெட் கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க. வினர் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார். எனவே கமல்ஹாசன் பா.ஜ.க.விற்கு ஒரு பொருட்டே இல்லை.

    நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியாஸ் விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3½ கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 11 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் கியாஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஊட்டி நகர தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×