search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை
    X

    திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை

    • மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
    • 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

    பெரம்பலூர்,

    திரைப்பட இயக்குனர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து தமிழ் தேசம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அப்துல் ரஹ்மான் தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள மதுபான பாரில், தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.

    அப்போது பாருக்கு மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் பட்டப்பகலில் தனியார் மதுபான பாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×