search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
    X

    செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    • தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது
    • முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை ஆகிய வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 8.30 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவர் முருகருக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் அலங்கார பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணியளவில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை தேர் மீண்டும் நிலைக்கு வருகிறது. வருகிற 8-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகி்ன்றனர்.

    Next Story
    ×