search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் நடந்த  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி நிறைவு
    X

    கோவையில் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி நிறைவு

    • கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
    • கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    கோவை,

    எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணா மலை தெரிவிக்கிறார்.

    அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3.75 லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார்ரூம்மில் இருந்து வருகிறதா ? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா ?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

    அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4.50 லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாக அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணா மலைக்கு என்ன தயக்கம்?

    அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுகிறீர்கள். படையப்பா படத்தில் ரஜினி காந்த் பேசும் டயலாக்போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைபோல பயன்படுத்துவது எல்லாம் நான் தான். ஆனால் கொடுப்பது எல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கிறது அவரது பேச்சு.

    என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன். தமிழகத்தில் நேற்று ஒரு நாள் அதிகபட்ச மின் நுகர்வு 400 மில்லியன் யூனிட்டை கடந்து இருக்கிறது. முதல் முறையாக இந்த அளவு கடந்து இருந்தாலும் எந்தவித மின்தடையும் இல்லாமல் மின்வாரியம் செயல்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்பேசினார்.

    அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×