search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்

    • சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் -நாஞ்சிக்கோட்டை சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கருணாவதி நகர் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு முழுமையாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை கிழக்குப் பகுதிக்கு இணைக்கும் வகையில் சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அந்த வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க கோரி ஏற்கனவே கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாததால் இன்று காலை தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் திடீரென பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி உடனடியாக முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×