search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்
    X

    பழனியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்

    • கடைகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
    • அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கிரிவலப்பாதையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப்பாதையை சுற்றி தடுப்புகள் அமைத்து வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

    கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனிடையே 74 கடைகளை காலி செய்யுமாறு பழனி தேவஸ்தானம் அளித்த நோட்டீசை எதிர்த்து 2015-ம் ஆண்டு வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்த வழக்கில் மேல் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கில் பழனி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குடமுழுக்கு நினைவரங்க பகுதியில் உள்ள 36 கடைகள், தண்டபாணி நிலைய வளாக கடைகள் 11, மங்கலம்மாள் மண்டப கடைகள் 7 உள்பட மொத்தம் 74 கடைகளை ஜூலை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி தேவஸ்தானம் சார்பில் அங்கிருந்த கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்றே பல வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்தனர். மீதி இருந்த கடைகளை அகற்றும் பணிக்காக கோவில் செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர்.

    அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் இது பட்டா இடத்தில் உள்ளது என்றும் காலி செய்ய தேவையில்லை எனவும் அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டு உத்தரவை காட்டி அதன்படி செயல்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனி அடிவாரத்தில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    Next Story
    ×