search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை-புறநகர் பகுதியில் திடீர் பலத்த மழை
    X

    சென்னை-புறநகர் பகுதியில் திடீர் பலத்த மழை

    • வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.
    • தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெப்பத்தில் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    காலை 10 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டு கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, திருவொற்றியூர், ராயபுரம், பெரம்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சில இடங்களில் மழை இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது.

    வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும் மேற்குதிசை காற்றும் சந்திக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×