search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து குமரியில் 200 கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்
    X

    மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து குமரியில் 200 கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்

    • மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    • குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    குளச்சல்:

    மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.

    இதற்கான கருத்துரு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு கடந்த 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தவிருந்தது. இதற்கு மீனவர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மணல் ஆலைக்கு மணல் அள்ளுவதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை திருத்தலம் முன்பாக மீனவர்கள் புறப்பட்டு பீச் சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் பங்குத்தந்தை ஜெகன் மற்றும் புனித காணிக்கை அன்னை திருத்தல நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு, பக்தர்கள் சபை, அனைத்து அமைப்பினர் உள்பட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

    மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மனித சங்கிலியை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க துணை தலைவர் ஜாண்சன் ஒருங்கிணைத்தார்.

    இதுபோல் குறும்பனையில் புனித இக்னேசியஸ் ஆலயம் சார்பில் ஊர்மக்கள் வாணியக்குடி முதல் ஆலஞ்சி வரை கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அமைப்புகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு)மதியழகன், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி, இணையம், கொட்டில்பாடு, தேங்காய்ப்பட்டினம் உள்பட 200-க்கும மேற்பட்ட கிராமங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100-க்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×