search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எங்கள் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல- சிபிஎம் உறவு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
    X

    எங்கள் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல- சிபிஎம் உறவு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

    • புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது.
    • ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் ஒரு நாளிதழ் சார்பில் நடைபெற்ற 'இந்தியா-75' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, 'இந்தியா-75' என்ற இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டாட்சிக் கருத்தியலும்-விடுதலையால் பெற்ற உரிமைகளும்-அனைத்து விதமான வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன.

    இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக்கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இருந்தார்.

    பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார் பிரதமர் நேரு.

    இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார் பிரதமர் நேரு.

    ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்.

    வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

    அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக பாராளுமன்றத்தை நடத்திக் காட்டினார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார்.

    முதல்-அமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது.

    இத்தகைய காரணங்களால்தான் இந்தியாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது.

    இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

    கூட்டாட்சி, மாநிலத் தன்னாட்சி மதச்சார் பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும்.

    இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் இந்தியாவைக் காப்பாற்றுவது ஆகும்.

    75-ம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.

    இந்தியா என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல!

    பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு.

    ஒன்றியம்-யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான்.

    இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.

    மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.

    தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஒரே போல ஆக்குவது என்பது ஒற்றுமையில் இருந்து வேறுபட்டது. ஒற்றைத்தன்மையைத் திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது.

    இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன.

    இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது.

    ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ-நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான்.

    ஒற்றை மொழியை-ஒற்றை மதத்தை-ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்.

    இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள். இந்திய மக்களின் எதிரிகள்.

    இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

    வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை.

    வலிமையான அதிகாரம் பொருந்திய தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல!

    வலிமையான வசதியான-தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்குப் பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது!

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் தானே நன்மை கிடைக்கிறது?

    ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை?

    மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது!

    இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்!

    மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.

    இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

    பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய பாராளுமன்றங்களில்-பேசுவதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான பாராளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை.

    இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை!

    சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை.

    நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.

    புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.

    ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. இவை அனைத்துக்கும் இடையில் தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும். அரசியல் நடத்தியாக வேண்டும். மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    விழாவில் நிருபர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-கேரள மக்கள் தமிழ் சினிமா மற்றும் இசையின் பெரும் ரசிகர்கள். அதே போல ரசிகர் கூட்டம் தமிழக முதல்-அமைச்சருக்கும் அங்கு இருக்கிறது. கண்ணூரில் நடந்த சி.பி.எம். கட்சி மாநாட்டில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழகம் எப்படிப் பார்க்கிறது?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்:-எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல 'காம்ரேட்' பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டு இருந்த நேரத்தில், தமிழ் நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும்.

    அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை ஊடகங்கள்கூட எழுதியது.

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது உள்ளபடியே சொல்கிறேன். என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதராணமாக உங்களுடைய முதல்-அமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளை தான் நான் கையில் எடுத்தேன்.

    குறிப்பாக, கொரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மாநிலத்தினுடைய முதல்-அமைச்சர் பினராயி விஜயனின் வழிகாட்டுதல்படி தான் அந்தப் பணியை நிறைவேற்றினேன் என்பது முக்கியம். இதுதான் எனக்கு ஒரு பெரிய பெருமை.

    கேள்வி:-தமிழகத்தில் சி.பி.எம். கட்சியும் தி.மு.க.வும் கூட்டணி கட்சிகள். இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது?

    எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சி.பி.எம்.-யை பொறுத்தவரையும் அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது, இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு செய்து கொண்டு இருக்கிறோம். அதையும் தாண்டி பல கருத்துகளை சி.பி.எம். அதிகாரபூர்வமான பத்திரிகையான "தீக்கதிர்" பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    Next Story
    ×