search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுமதியின்றி இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு
    X

    அனுமதியின்றி இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

    • செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.
    • மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2ல் இருந்து அரசு பஸ் ஒன்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறது. இந்த பஸ்சை கடந்த 15ம் தேதி கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை ஏற்றிச் செல்வதற்காக புக்கிங் செய்தனர். சுமார் 80 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்சை அன்று காலை அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆத்தூரில் இருந்து கோபால்பட்டிக்கு பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

    பின்னர் மாலையில் மீண்டும் அவர்களை கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு தற்காலிக டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணிகளுக்கான டிக்கெட்டாக இலவச மகளிருக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை தற்காலிக கண்டக்டர் வழங்கி உள்ளார். இந்நிலையில் செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.

    அப்போது மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக இதுபோன்று தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயணிகளை புக்கிங் செய்து ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்துக் கழக மேலாளர் வழங்கும் அனுமதி கடிதத்தை கண்டக்டர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் முறையான விதிகளை பின்பற்றாத போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்களான சுப்பையா, ஜோசப் மிக்சன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×