search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லால்குடி துணை தாசில்தார் கைது
    X

    பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லால்குடி துணை தாசில்தார் கைது

    • லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
    • கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 2002-ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.

    மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த மார்ச் 5 தேதி லால்குடி உதவி கலெக்டருக்கு விண்ணப்பித்தார்.

    விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து லால்குடி துணை தாசில்தாருக்கு அனுப்பி உள்ளார். இதனிடையே தான் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்தார்.

    அப்போது தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு துணை தாசில்தார் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். தாலுகா அலுவலகத்தில், மோகனிடமிருந்து 20 ஆயிரம் லஞ்சம் பணத்தை ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

    இதன் காரணமாக லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது. கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×