search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தையின் அட்டகாசத்தால் 3 மாதமாக அச்சத்தில் தவிக்கும் கிராமமக்கள்
    X

    சிறுத்தையின் அட்டகாசத்தால் 3 மாதமாக அச்சத்தில் தவிக்கும் கிராமமக்கள்

    • சிறுத்தையை கூண்டில் சிக்க வைப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது.
    • கேமரா காட்சியின் அடிப்படையில் காப்புக்காட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மேய்ச்சலில் இருந்த ஆடு மற்றும் வளர்ப்பு நாய்களை தாக்கியது. வனத்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட கேமரா, 4 கூண்டு வைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சிறுத்தையை கூண்டில் சிக்க வைப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

    மாறாக ஊதியூர் காப்புக்காட்டில் சிறுத்தை தஞ்சம் புகுந்தது. 930 ஏக்கர் பரப்பளவிலான அந்த காட்டில் மான், குரங்கு உள்ளிட்ட சிறிய விலங்கினங்கள் அதிக அளவில் உள்ளன. அவ்வப்போது காப்புக்காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை குடியிருப்பு பகுதியில் கால்நடைகளை தாக்குகிறது.

    சிறுத்தை நடமாட்டத்தால் ஊதியூர் மலை மீதுள்ள கோவில்களுக்கு மாலை நேரங்களில் பக்தர்கள் சென்று வருவதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும். அல்லது அப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை தூக்கி சென்றது. இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி பொதுமக்கள் சிறுத்தையை விரைவாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து கோவை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம், ஊதியூர் காப்புக்காடு பகுதியை பார்வையிட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காங்கயம் ரேஞ்சர் தனபால் மற்றும் வனத்துறையினர் விளக்கினர்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கேமரா காட்சியின் அடிப்படையில் காப்புக்காட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும். ஆரோக்கியத்துடன் உள்ளது. காட்டுக்குள் உள்ள மான், குரங்கு ஆகியவற்றை உணவாக்கி கொள்கிறது. அதற்கான தண்ணீரும் கிடைப்பதால் அங்கேயே தஞ்சமடைந்துள்ளது.

    சிறுத்தையுடன் பெண் சிறுத்தை ஏதேனும் உள்ளதா, அதனால் இனப்பெருக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் கண்காணித்தோம். ஆனால் சிறுத்தை தனியாக தான் இருக்கிறது. காப்புக்காட்டில் இருந்து அதிகபட்சம் 700 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வந்து செல்கிறது. இடைப்பட்ட 100 மீட்டரில் குடியிருப்பும், அதையொட்டி பட்டியும் இருப்பதால் கால்நடைகளை அடித்து விடுகிறது.கூண்டில் சிக்க வைப்பது அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் அதற்காக ஆலோசித்து வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×