search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களை கட்டப்போகும் கல்யாண வைபோகம்...!
    X

    களை கட்டப்போகும் கல்யாண வைபோகம்...!

    • வைத்திலிங்கம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்களை அழைத்து உள்ளார்.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளாராம்.

    நல்ல செய்தி ஒன்று தஞ்சையில் இருந்து வரும் என்ற நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள். வருகிற 7-ந்தேதி வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமணம் தஞ்சாவூரில் விமரிசையாக நடைபெற போகிறது.

    இந்த கல்யாண வைபோகம்தான் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்திற்கு செல்வதற்காக 7-ந்தேதி நடைபெற இருந்த அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தையும் டி.டி.வி.தினகரன் தள்ளி வைத்து உள்ளார்.

    எனவே திருமண வைபோகத்தில் அவர் பங்கெடுப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் சசிகலாவை அழைக்க சென்ற போது கையில் கட்டுடன் அவர் இருந்ததை பார்த்து வைத்திலிங்கம் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போனாராம். அம்மா கையில் என்ன கட்டு என்று கேட்டுள்ளார். கையில் சிறு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கட்டை அவிழ்த்து விடலாம் என்று தெரிவித்த அவர் கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    ஆக அந்த கல்யாணத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் சந்திக்க போகிறார்கள் என்பதுதான் இப்போதைய பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல வைத்திலிங்கம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்களை அழைத்து உள்ளார். அத்துடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளாராம். மொத்தத்தில் இந்த கல்யாண வைபோகம் அ.தி.மு.க. வட்டாரத்தில் எந்தவித தாக்கத்தை உருவாக்கும் என்ற எண்ணம் கட்சியினரிடம் எழுந்துள்ளது.

    Next Story
    ×