search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணறுகளில் பிணமாக மிதந்த வியாபாரி, தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை
    X

    கிணறுகளில் பிணமாக மிதந்த வியாபாரி, தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
    • இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 28), டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு சர்மிளா தேவி (25) என்ற மனைவியும், மணிகண்டன் (5), கிருசிகா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அப்புசாமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கு இடையே அங்கு வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது தொடர்பாக தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மேச்சேரி காளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). மளிகை கடை வைத்துள்ளார். அவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு திருமணமான 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜேந்திரன், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தொடர்ந்து தேடியபோது மேச்சேரி தொப்பூர் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு அருகே, ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி பார்த்தபோது ராஜேந்திரன் அதில் பிணமாக மிதந்தார்.

    அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா என்பது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×