search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.


    பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை.
    • வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார்.

    மேலசொக்கநாதபுரம்:

    யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான அகோரி சாமியார் தற்போது தேனி மாவட்டம் போடியில் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவதுடன் தான் இங்கேயே ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.

    காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக கூறும் இவர் கடந்த சில மாதமாக கோவையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமூக வலைதளங்களில் பிரபலமான அகோரி கலையரசன் சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்பு அங்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சித்திரை திருவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன்.

    நான் போடியில் பிறந்து வளர்ந்த காலத்தில் இறைவனின் அருள் எனக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளி தேவியின் அருளால் அகோரியாக மாறி என்னை பிரகனப்படுத்திக் கொண்டபிறகு பல்வேறு ஊர்களில் இருந்து என்னைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர்.


    அகோரியாக மாறிய நான் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிபாடு செய்தது ஏன்? என கேட்கிறார்கள். விஜயகாந்த் இறப்பது எனக்கு முன்பே தெரியும். அவர் இறந்த சமயத்தில் நான் காசியில் இருந்தேன். இதனால் அப்போது அவரை பார்க்க வரமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சமாதி கிடையாது. கோவில். மக்களுக்காக வாழ்ந்த மனிதக்கடவுள்.

    எனவே அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும். எனக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை. என்னை யார் வேண்டுமானாலும் இழிவாக பேசட்டும். எனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை காண்பதற்காக காசியில் இருந்து வந்தேன். நான் பிரேமானந்தாவோ, நித்யானந்தாவோ கிடையாது. மக்களுக்கு என்னால் ஆன நல்ல காரியங்களை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

    எனது இறுதி காலம் போடியில்தான் இருக்க வேண்டும். எனக்கு இங்கே ஜீவசமாதி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான இடத்தையும் பக்தர்களை தேர்வு செய்ய கூறியுள்ளேன். சமீப காலமாக ஆன்மீகத்துக்கு எதிராக பலர் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை கொடுப்பார். தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக பேசும் நபர்களால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும். வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார். மோடி சித்தர் வடிவானவர். அதனால்தான் அவருக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அதனை திறப்பு விழா நடத்தும் பாக்கியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகோரி கலையரசன் போடிக்கு வந்திருப்பதை அறிந்ததும் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அவரை காணக் குவிந்தனர். அவர்களுக்கு அருளாசி வழங்கியபடி அவர் மற்ற கோவில்களில் தரிசனம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார்.

    • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
    • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

    அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

    ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.

    இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.

    மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
    • வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-

    தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.

    பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.


    உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    • சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
    • இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சிலமலை கிராமம். இங்கிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை அருகே ஜமீன் பைபாஸ் வண்டிப் பாதையில் சுமார் 34 சென்ட் நிலம் போடி சரக போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே தலையீட்டின் பேரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    மேலும் சிலமலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் போலீஸ்நிலையம் கட்டுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு கூறி விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிலமலை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை அருகே வசித்து வரும் கனகராஜ் என்பவர் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கட்டிடப் பணிகளை தொடங்கினார்.

    அஸ்திவாரங்கள் தோண்டப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை எச்சரித்து பணியை நிறுத்துமாறு கூறினார். இதனால் சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

    தற்போது அஸ்திவாரங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜிடம் வேலையை நிறுத்தும்படியும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    மேலும் அப்பகுதியை சர்வே செய்ததில் அப்பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் சிட்டா அடங்கல் பட்டாவில் வண்டிப்பாதையாக குறிப்பிட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார். அதனையடுத்து ஆவணங்களை காட்டி இந்த இடம் உங்களுடையது இல்லை என கூறினார். மேலும் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சுவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கனகராஜ் தானே புதிதாக கட்டிய சுவர்களை அகற்றினார். அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
    • ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.

    ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பா.ஜ.க. நிர்வாகி திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். பின்னர் அங்குள்ள காளாத்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும். திரு காளாத்தீஸ்வரர், ராகு, கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த கோவிலில் 1984 ஆண்டு சிலை கடத்தப்பட்டு அங்கு காவலுக்கு இருந்த மாணிக்க தேவரை கொலை செய்த வழக்கில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்துள்ளார். பிரதம மந்திரியின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு கிராமப்புற கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று அறிவிப்பு செய்துள்ளனர். இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை. 2024-ம் ஆண்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கபடும். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டு விவரங்கள் குறித்தும் பேசுவதற்கு அகில இந்திய அளவில் பாராளுமன்ற போர்டு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களுக்கு உதவாத உதவாக்கரை அரசை மக்கள் உதறித்தள்ளும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1034 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.16 அடியாக உள்ளது. 18.55 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும்.
    • அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சி காலம் ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய நண்பர். நாங்கள் 2 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற 24ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். அ.ம.மு.க. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பேரூர் செயலாளர் ராஜா, அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவசெல்வம், திருமலை, நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×