search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ரபீஸ் ராஜா (வயது33). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது நகைக்கடைக்கு பெண் ஒருவர், வாலிபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் சுமார் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 4 கிராம் கொண்ட ஒரு ஜோடி கம்மல் வாங்கி உள்ளனர்.

    மீதமுள்ள நகைக்கு பதிலாக பணமாக ரூ.2.55 லட்சம் பணமாக பெற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ரபீஸ் ராஜா அந்த 78 கிராம் பழைய நகைகளை உருக்கி உள்ளார். அப்போது அவை போலியான நகைகள் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ஏமாற்றியதை அறிந்த கடை உரிமையாளர், கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்துவிட்டு மோசடியில் ஈடுபட்டது ராஜபாளையம் சோமையா புரத்தை சேர்ந்த அன்னலெட்சுமி (வயது45), ஸ்ரீநாத் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அன்னலட்சுமியிடம் இருந்து கம்மல் மற்றும் ரூ.2.½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர்.

    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மைலப்புரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 43). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரியில் மணிகண்டன் புறப்பட்டார். கிளீனராக சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணியை சேர்ந்த பெருமாள்(28) என்பவர் லாரியில் உடன் வந்தார். இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தமிழக-கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் இருக்கும் ரெயில்வே தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது கிளீனர் பெருமாள் லாரியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். அதே நேரத்தில் விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் முதிய தம்பதியான சண்முகையா(66)-வடக்கத்தி அம்மாள்(60) ஆகியோர் அங்கே விரைந்து வந்தனர். மேலும் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் சுப்பிரமணியன் என்பவரும் அங்கு வந்தார். இதற்கிடையே திருவனந்தபுரம் பகவதியம்மன் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு புனலூர் நோக்கி செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று நள்ளிரவு 12.50 மணியளவில் புறப்பட்டு சென்றது.

    அந்த ரெயில் லாரி விபத்து நடந்த பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த முதிய தம்பதி, உடனடியாக லாரி விபத்து நடந்த இடத்திற்கு சற்று முன்பாக ஓடிச்சென்று சிவப்புநிற துணியை டார்ச் லைட்டில் சுற்றி ரெயிலை நோக்கி ஒளிரச்செய்தனர். இதையடுத்து ரெயில் டிரைவர் என்ஜினை நிறுத்தினார். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து இருப்புபாதை பராமரிப்பு பொறியாளர் ஞானசுந்தரம், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பக விநாயகம், மாரிமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், தலைமை காவலர்கள் நாகராஜ், மாரிதுரை ஆகியோர் விரைந்து வந்தனர். லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் வழக்கம்போல் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. பெரும் விபத்தை தவிர்க்க சாமர்த்தியமாக செயல்பட்ட முதிய தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

    • அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
    • கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் ' நடைபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழக அரசின் இலவச வேஷ்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. 2019-ல் பா.ஜனதா 295 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    கடந்த 2021-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 511 தேர்தல் வாக்குறுதியை கூறியது. அதில் 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறினார்கள். பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.

    ஆனால் எதனையுமே தி.மு.க. செய்யவில்லை. ராமர் கோவில், 370 சட்ட திருத்தம், முத்தலாக் தடை சட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் போன்ற வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றி உள்ளது. 73 சதவீதம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துள்ளோம்.

    அடுத்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு 33 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும். நீர் ஆதாரத்தை உயர்த்துவதற்கு காமராஜர் கொண்டு வந்த திட்டமான இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் ஏழை குழந்தைகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி தொடங்கப்படும்.

    2026-ல் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் 3 வருடங்களில் மதுக்கடையை ஒழிப்போம். மதுக்கடைகளை ஒழித்து விட்டு புதிதாக கள்ளுக்கடைகளை திறப்போம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை நீக்கப்படும். கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்கப்படும். கனிம வள கொள்ளை தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கடையநல்லூர்:

    திருச்சியில் இருந்து சிலர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு ஒரு காரில் வந்தனர். காரை திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.

    கார் கடையநல்லூர் அருகே அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்தபோது மேலகடையநல்லூரில் இருந்து விவசாய பணிக்காக சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.

    இதில் கார் மற்றும் டிராக்டரின் முற்பகுதி நொறுங்கியது. அப்போது காரில் இறந்த பலூன் வெடித்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதேபோல் டிராக்டரை ஓட்டி வந்த சேகர் என்பவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    • மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.

    விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

    • மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
    • கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    தென்காசி:

    தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா இன்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

     முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ந்தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
    • போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது38). இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சீன பீங்கானால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவையொட்டி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நேற்று மாலை பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு பார்சல் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்றது. அதனை நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆன்ந்த் உயிரிருக்கு போராடினார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாவூர்சத்திரம் போலீசார், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு மினி லாரியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
    • கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

    கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தற்போது கட்சி கொடியை தயார் செய்யும் பணியில் நடிகர் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து கட்சியாக மாற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பல்வேறு இடங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அட்டகாசமான சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.

    மாநகர பகுதிகளில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் தலைமையில் திரளான இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் பாளை தியாகராஜ நகர் பகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட வருகை தரும் தலைவர் தளபதியின் தமிழக வெற்றி கழகம் வருக வருக என போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    இதேபோல் அரசனுக்கே இந்த அரியாசனம். தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாளை தலைமை இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மாற்றம் உன்னிடம் இருந்து தொடங்கட்டும். நாளைய முதல்-அமைச்சரே என்றும், நாளைய தமிழகமே என்றும் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

    இவ்வாறாக நெல்லை மாநகர இளைஞரணி சார்பில் பரவலாக அதிரடி வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி விஜய் ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை தங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

    • முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
    • தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி முப்புடாதி (வயது 65).

    இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டதால் மகன் ராமருடன் வசித்து வந்தார். ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள ஆவுடையானூரில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் முப்புடாதி அங்குள்ள மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அவர் ஆடை இன்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (72) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராமர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது.
    • வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது.

    மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது

    அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    • கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
    • போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.

    இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.

    உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    ×