search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 8 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள், ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில் ஆம்பூர் நோக்கி வந்தனர். அப்போது கடாம்பூர் அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்க ஓடியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், ஆட்டோவை நிறுத்த முயற்சித்தார்.

    அப்போது தரிக்கட்டு ஓடிய ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி ஹேமாவதி (வயது 35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
    • வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.

    கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

    இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

    ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
    • மனைவி ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா? என விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரூபா(38) மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    வலி தாங்க முடியாமல் கூச்சுலிட்டபடி ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ராஜேஷ்குமார் முன்னதாக ஒரு கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துள்ளார். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் அவரது மனைவி ரூபாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. விசாரணையின் போது அவரது மனைவி ரூபா மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா தனது கணவனை ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா?, அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்த பின்னரே, ராஜேஷ் குமாரை வெட்டியதற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனிபிரிவு போலீசார் நடவடிக்கை
    • தமிழக- ஆந்திர எல்லை மலைப்பகுதியில் சோதனை

    ஆலங்காயம்:-

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், ரேணுகா தேவி, விஜய் மற்றும் போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கள்ள சாராயம் தயாரிக்க மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 105 லிட்டர் சாராயம் ஆகியவற்றை அழித்தனர்.

    மேலும் தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது

    ஜோலார்பேட்டை:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்றம்பள்ளி தாலுக்கா, காவேரிப்பட்டு கிராமத்தில் உள்ள கொட்டாறில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு தரமற்ற கம்பிகளையே பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த கொட்டாறு சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது. ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் வரும்போது பாலம் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் அனைத்தும் தரமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:-

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

    மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் கரு மேகங்கள் சூழ திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    அதேபோல் ராமகிருஷ்ணாபுரம், மல்லகுண்டா, வேட்டப்பட்டு, பச்சூர், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டறம்பள்ளி பகுதியில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூரில் 3.20 சென்டிமீட்டர், ஆலங்காயத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவானது.

    • பொதுமக்கள் தர்ணா போராட்டம்
    • தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஆலங்காயம்:-

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான 30- க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் இருந்தன. தற்போது அந்த பள்ளியில் காலாண்டுதேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, லோடு ஆட்டோ ஒன்று வெளிய வந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த 14 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது இது குறித்து பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் துரையிடம் கேட்டனர்.

    பழைய மரங்கள் என்பதாலும், இதை வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விகுழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மரங்கள் வெட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மரங்களை வெட்டியதாக தலைமை ஆசிரியர் கூறினார்.

    அப்போது பொதுமக்கள், மரங்களை வெட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று கூறி தலைமை ஆசிரியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியே செல்ல விடாமல் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஆலங்காயம் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு விசாரணை நடத்தி துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம் மனு அளித்தனர்.

    இதை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் சித்ரா, ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் தலைமை ஆசிரியர் துரையிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரி
    • சரியாக செயல்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் மழைமானியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் மழைமானிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்
    • 14 மனுக்களை பெற்றுக் கொண்டார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் திருப்தி அடையாத 9 மனு தாரர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் புதிதாக 14 புகார் மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

    இதில் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (வயது 29). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    திம்மாம்பேட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எனது கணவர் கோவிந்தசாமி நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த மே மாதம் 28-ந் தேதி நான் கடைக்கு சென்று இருந்தேன். எனது கணவர் கோவிந்தசாமி வேலை சம்பந்தமாக வெளியே செல்ல இருந்ததால் நான் கடையை பார்த்து கொண்டேன்.

    அப்போது வாலிபர் ஒருவர் கடைக்கு வந்திருந்தார். என்னிடம் ரூ.500 கொடுத்து சில்லறை கேட்டார். சில்லறை எடுத்து கொடுக்க திரும்பிய போது திடீரென கல்லாவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகளை அந்த வாலிபர் திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து திம்மாம் பேட்டை போலீசில் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே நகைகளை திருடிச் சென்ற வாலிபரை கண்டுபிடித்து நகையை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

    நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • வனத்துறையினர் விடிய விடிய ரோந்து

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் வழக்கும் போல் வேலை முடித்துவிட்டு நேற்று இரவு தனது காரில் நாட்டறம்பள்ளியில் இருந்து நாயனசெருவு கிராமத்தின் வழியாக வீட்டுக்கு சென்றார்.

    அப்போது கொரிபள்ளம் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கரடி ஒன்று சாலையை கடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டார்.

    மேலும் கரடி சாலையை கடந்ததை காரில் இருந்தபடியே தனது செல்போனில் பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கரடி சாலை கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மேலும் கிராம மக்கள் அச்சமடைந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கினர்.

    மேலும் இரவு நேரத்தில் அந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்தனர். மலை கிராம சாலைகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனசரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு பதிந்துள்ள கால் தடம் மற்றும் உதிர்ந்த முடிகளை வைத்து சாலையில் கடந்து சென்றது கரடி தான் என்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனசரகர் குமார் கூறியதாவது:-

    ஆந்திர தமிழக எல்லையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மான், மயில், கரடி போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளன.

    அவைகளின் வாழ்விடம் காடுகள் தான். சில நேரங்களில் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்லும். அதன்படி சாலையை கரடி கடந்த சென்றபோது தான் சதீஷ்குமார் என்பவர் பார்த்துள்ளார். கொரிபள்ளம் அருகே உள்ள கரடி மலை பகுதியில் நடமாடியது கரடி தான் என்பதை உறுதி செய்துள்ளோம்.

    மேலும் இந்த வனப்பகுதியில் 6 கரடிகள் நடமாட்டம் உள்ளது. அவைகள் எளிதில் ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை. இருப்பினும் வனத்துறையினர் குழுவாக பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    கரடி மலை பகுதியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோயாளிகள் கடும் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், டவுன் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக குழந்தைகள் பிரிவு, பிரசவ பிரிவு, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் அங்காங்கே ஓட்டைகள் உள்ளதால் அதிகளவில் பெருச்சாளிகள், எலிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக உள்நோயாளிகள் படுக்கை யில் இருக்கவே மிகவும் பயத்துடன் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கழிவறைக்கு சென்றாலும் படுக்கையில் சுற்றி எலிகள் அதிகமாக இருப்பதால் கழிவறைக்கு செல்லவும் அச்சப்படுகின்றனர்.

    ஏற்கனவே பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் பெருச்சாளிகள் மற்றும் எலிகளின் அட்டகாசத்தால் மேலும் நோய்கள் பரவும் அச்சம் உள்ளதாக நோயாளிகள் பீதியில் உள்ளனர்.

    இந்த ஆஸ்ப்பதிர்க்கு வரவே அச்சபடுகின்றனர். நோயாளிகளுக்கு வைக்கப்படும் உணவு மீது எலிகள் அமர்ந்து சாப்பிட்டு செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் படுக்கையறையில் எலிகள் சுற்றி திரிவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து மருத்துவதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தடுப்புச் சுவரில் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் டிஎக்ஸ்ஆர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு இவரது மகன் அரவிந்த் (வயது 27).

    இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 1 ½ வருடங்களுக்கு முன்பு ஆனந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

    அரவிந்த் கடந்த சனிக்கிழமை தனது குழந்தைக்கு குலம் தெய்வம் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக விடுமு றையில் வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு சென்று சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சின்ன பொன்னேரி சுடுகாட்டு அருகே உள்ள சிறிய மேம்பாலம் தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×