search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் பலத்த மழை - அரசு மருத்துவமனையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
    X

    மருத்துவமனை முன்பு குளம் போல் தேங்கியிருக்கும் மழைநீர்.

    பல்லடத்தில் பலத்த மழை - அரசு மருத்துவமனையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயில் அதிகமாகவே இருந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூழல் மாறி வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. பின்னர் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது . சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதற்கிடையே பல்லடம் பகுதியில் உள்ள, அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காந்தி ரோடு பகுதியில் மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது:-

    மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது.

    இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வெளியே வர முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் உடனிருப்பவர்கள்,மற்றும் பார்வையாளர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வளாகத்திற்குள் புகுந்துள்ள வெள்ள நீரில் சாக்கடை கழிவுகளும் கலந்துள்ளதால் சுகாதாரமற்ற சூழ்நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த திடீர் மழையால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியும், மற்றொருபுறம் பொதுமக்கள் அவதியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×