search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழ்நாடு தலையாட்டி பொம்மை அல்ல: அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
    X

    தமிழ்நாடு தலையாட்டி பொம்மை அல்ல: அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

    • மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சி
    • தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும்...

    மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலக அரங்கில் பெருமைப் படுத்தி வருகிறார். மாநில மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை. அனைத்து மாநில மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.

    தமிழ், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியாக கொண்டு வருவதாக கூறப்படுவது தவறு. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும்.

    அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக் கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை பிரதான 10 மாநில மொழிகளில் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான பாடத்திட்டங்கள் வெளியாகும்.

    பிரதமர் மோடி ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதில்லை. மத்திய மந்திரிகளும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் முயற்சிற்கு அதிக வேகத்தை அளிக்கிறது.

    இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் ஆட்சி செய்த காலகட்டத்திற்குப் பிறகும் அப்படியே இருந்தன. இது ஒரு பெரிய சாதனை. மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன.

    மொழியின் மரியாதை இல்லாமல் பாரம்பரியத்தின் மரியாதை முழுமையடையாது. உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மரியாதை கொடுக்கும்போதுதான் அலுவல் மொழி ஏற்றுக்கொள்ளப்படும். அலுவல் மொழியின் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஏற்புணர்வை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

    தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.

    இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உணர வேண்டும்.

    1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×