search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
    X

    முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    • முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • நாளை தேரோட்டம் நடக்கிறது

    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பூச்செரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (5-ந்தேதி, வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம்.கே.காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் உலகநாதபுரம் அம்மன் கோவிலை நோக்கி வீதி உலா வருகிறது. இதில் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

    நாளை மறுநாள் (6-ந்தேதி) காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னிச்சட்டி எடுத்து வரப்படுகிறது. இதையடுத்து காலை 11 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடக்கிறது. 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு 2000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் அருகில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச்சங்க தலைவர் ரெங்கராஜ் தலைமையில் பொறுப்பாளர்கள் சண்முகம், மதியழகன், பால்ராஜ், ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×