search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசேரியில் சரத்குமார் பிரசாரம் செய்த காட்சி
    X
    வடசேரியில் சரத்குமார் பிரசாரம் செய்த காட்சி

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடிதான் - சரத்குமார்

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். #BJP #Sarathkumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:-

    மத்தியில் வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி வரவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி உருவாகி உள்ளது. ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். வலுவான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் சேர்ந்து தான் ஆக வேண்டும்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் மட்டும் சொல்லி வருகிறார். கூட்டணியில் உள்ள வேறு எந்த தலைவரும் ஏற்று கொள்ளவில்லை.

    கேரளாவில் கம்யூனிஸ்டு, ராகுல்காந்தியை தோற்கடித்தே தீருவோம் என சொல்லி வருகின்றனர். இங்கு அப்படி இல்லை என தெரிவிக்கின்றனர். இப்படி மாறி, மாறி கொள்கை கொண்டு இருந்தால் எப்படி நிலையான ஒரு ஆட்சியை தர முடியும்.

    மதவாதம் என்று சொல்லுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியில் சேர்ந்து இருந்த போது மதவாதம் என்பது தெரியவில்லையா? அனைவரும் ஒத்த கருத்துடன் இருந்து செயல்படும் தமிழக அரசும், மத்திய அரசும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான்.

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்தபடி மடி கணினி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த திட்டத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய வேண்டும்.

    1999 முதல் 2004-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா அரசு இருந்தது. அதன் பிறகு 10 ஆண்டு காலம் காங்., ஊழல் ஆட்சி செய்துள்ளது. நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காவிரி பிரச்சினை, கச்ச தீவு என மத்தியில் பிரச்சினைகள் நிறைந்த ஊழல் மிகுந்த ஆட்சியாகவே இருந்தது.

    மத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியில் நிலையான ஆட்சி, வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பொன்.ராதாகிருஷ்ணனை ஓட்டு போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். #BJP #Sarathkumar
    Next Story
    ×