என் மலர்
இந்தியா
- தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.
- இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு ஒருநாள் முன்னதாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ராஜலிங்கமூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாலிபருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
- வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது வாலிபர். இவருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
அவரை மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரல் பகுதியில் கட்டி போன்று அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அப்போது வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனை அகற்றிய டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் கேட்டனர். அப்போது வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்தனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும்.
- ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான உபகரணம் 'ஸ்டெதஸ்கோப்'. இதனை பயன்படுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் இதயத்துடிப்பு, நுரையீரல், இரைப்பை, குடல், கருப்பை ஆகியவற்றில் ஏற்படும் ஒலிகள் உள்ளிட்டவைகளை கேட்க முடியும்.
அதனை வைத்து தான் நோயாளியின் உடல் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் கண்டு பிடித்து சிகிச்சையை தொடங்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த ஸ்டெதஸ்கோப்பை பணியில் இருக்கும் போது மருத்துவர்கள் எப்போதும் தங்களுடன் வைத்திருப்பர்.
இதனால் டாக்டருக்கான அடையாளமாக 'ஸ்டெதஸ் கோப்' இருந்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியிருக்கிறார். கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் மன்னுத்தி வளாகத்தில் உள்ள கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்லூரியின் டாக்டர் ஜான் ஆபிரகாம் தான் அதனை உருவாக்கி உள்ளார்.
இந்த ஸ்டெதஸ்கோப் இரண்டு தனித்தனி பாகங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று நோயாளியின் உடலிலும், மற்றொன்று மருத்துவரின் காதுகளிலும் வைக்கப்படும். நோயாளியின் உடலில் இருந்து உருவாகும் சத்தம், டாக்டருக்கு அவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி வழியாக கேட்கிறது.
இதன் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும். இதனால் நோயாளி மற்றும் மருத்துவருக்கு இடையேயான நேரடி உடல் தொடர்பை குறைக்கிறது. நோயாளியின் இதய துடிப்பு, நுரையீரல் ஒலிகள் மற்றும் பிற சத்தங்களை தூரத்தில் இருந்தே மருத்துவர் கேட்க முடியும்.
மேலும் பாரம்பரிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒப்பிடுகையில், இந்த 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை குறைவாகும். பாரம்பரிய 'ஸ்டெதஸ்கோப்' விலை பொதுவாக ரூ.8ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை ரூ.5ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
காட்டு விலங்குகள் மற்றும் ஆபத்தான விலங்குகளுடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உடல் ரீதியான தொடர்பு இல்லாத காரணத்தால் விலங்குகள் தாக்கும் அபாயம் மற்றும் தொற்று நோய்கள் பரவல் உள்ளிட்ட நேரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மேலும் அவர் இதற்கு முன்பு கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
- அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை.
- காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி 17-ந் தேதி செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து உள்ளது.
ஆனால், செல்வப்பெருந்தகையால் புதிய நிர்வாகிகள் நியமனமோ, மாவட்டத் தலைவர்கள் சீரமைப்போ சரியாக செய்ய முடியவில்லை. மூத்த தலைவர்களும் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமக் கமிட்டிகளை நியமிக்கும் நடைவடிக்கையில் செல்வப்பெருந்தகை தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட கிராமக் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்டந்தோறும் சென்று செல்வப்பெருந்தகை வழங்கி வருகிறார்.
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை. அவர்கள் செல்வப்பெருந்தகை நடத்திய ஆலோசனை கூட்டங்களையும், காணொலிக் காட்சி கூட்டங்களையும் புறக்கணித்தனர்.
இதற்கிடையே வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் செங்கம் குமார், டீக்காராமன் உள்பட 32 மாவட்டத் தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கரை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது.
அவர்கள் அளித்த புகாரில், கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களை செல்வப்பெருந்தகை மதிப்பதில்லை. கட்சியை தி.மு.க.வின் ஒரு அணி போல மாற்றி விட்டார். மூத்த தலைவர்கள் சிலரின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து தூக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தங்கள் புகார்களை தெரிவிக்க உள்ளனர்.
- 2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
- 2015 மற்றும் 2020-ல் ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்த்னா குமாரியை 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
என்றபோதிலும் இது இவருக்கு முதல் தேர்தல் இல்லை. 2015 மற்றும் 2020-ல் இதே தொகுதியில் பந்த்னா குமாரியிடம் தோல்வியடைந்திருந்தார். தற்போது 3-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரேகா குப்தாவின் வாழ்க்கை பின்னணியை பார்ப்போம்...
50 வயது ஆகும் ரேகா குப்தா அரியானா மாநிலம் சிந்து மாவட்டத்தில் உள்ள நந்த்கார்க் கிராமத்தில் 1974-ஆம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி பிறந்தார்.
ரேகா குப்தாவின் தந்தை வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இதனால் 1976-ம் ஆண்டு 2 வயதாகும்போது, அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.
டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தில் (ABVP) இணைந்தார்.
மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, 1996-1997 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தயால் சிங் கல்லூரியன் செயலாளராக இருந்துள்ளார்.
2000-ம் ஆண்டில் இருந்து பாஜக-வோடு ரேகா குப்தாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவில் சேர்ந்தார். டெல்லி பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக பணியாற்றினார்.
சிறப்பாக செயல்படும் அவரது திறமைக்கு உடனடியாக கட்சியில் அங்கீகாரம் கிடைத்தது. இளைஞர் அணியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 முதல் 2006 வரை தேசிய செயலாளராக இருந்தார்.
கட்சி அமைப்புகளுக்கான வலுவான திறமையும், கட்சியின் நோக்கத்திற்கான அர்ப்பணிப்பும் பாஜக-வில் முக்கிய இடம பிடிக்க உதவியது.
2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். வடக்கு பிதாம்பூரா தொகுதிக்குப்பட்ட இடத்தில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மாநகராட்சியின் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டி தலைவராக 2007 முதல் 2009 வரை பதவி வகித்துள்ளார்.
பாஜக-வின் டெல்லி பெண்கள் பிரிவு பொதுச் செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
- செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
- நீதிசார் நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக அவமதிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
புதுடெல்லி:
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யாகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில்பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே அமலாக்கத் துறை தலைமையகத்தின் இணை இயக்குநர் ஜவாலின் தேஜ்பால் சார்பில் வக்கீல் அர்விந்த் குமார் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது.
ஊழல் வழக்கிலோ, பண மோசடி வழக்கிலோ இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொண்டால் ஜாமின் ரத்து செய்வதற்கான முகாந்திரமாக கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் அமலாக்கத் துறை தரப்பு முக்கிய சாட்சியான தமிழ்நாடு மாநில தடயவியல் துறை நிபுணர் மணிவண்ணன் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வந்தார். ஆனால் ஜாமீனில் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 26, 30-ந்தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை. பின்னர் ஆஜரான மணிவண்ணனிடம் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் எவ்வித அர்த்தமும் இல்லாமல் குறுக்கு விசாரணை செய்தனர்.
இதுதவிர மூத்த வக்கீலை மாற்றிக் கொள்ளும் கோரிக்கையை செந்தில்பாலாஜி முன்வைத்ததுடன், டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களையும் கேட்டு மனு செய்தார்.
மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாம் பண மோசடி வழக்கு விசாரணையை திட்டமிட்டே தாமதப்படுத்தும் செந்தில்பாலாஜியின் முயற்சிகள். நீதிசார் நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக அவமதிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
பண மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் கூட, அமலாக்கத்துறை தரப்பு 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏதாவது ஒரு காரணம் கூறி 2 மாதங்களுக்கு அவர் தரப்பு இழுத்தடித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் செந்தில்பாலாஜியின் செயல்பாடு பண மோசடி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதையும், காலந்தாழ்த்துவதையும் தெளிவாக்குகிறது.
இல்லாத, அற்ப காரணங்களை முன்வைத்து விசாரணையை தள்ளி வைக்க கோருவதும், விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க தடங்கல்களை உருவாக்குவதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செந்தில் பாலாஜி மீறியிருப்பது தெளிவாகிறது. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் மேலும் ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலர் வெகு தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள். இதற்காக ரூ.100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் என்றும். இதன் மூலம் அவர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
- உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது.
- ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
மத்திய கல்வி மந்திரி தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது. உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. அதாவது தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
2 முறை நடக்கும் இந்த தேர்வுகள், அதன் முடிவுகள் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டம் குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கருத்துகள் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.
- ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
- சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். இதற்காக 'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரயான்-4' விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'சந்திரயான்-4' விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ராக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, 'விண்வெளி நிலையத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணில் 2 செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைப்பது மற்றும் பிரிப்பது போன்ற தொழில்நுட்ப அறிவு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
'சந்திரயான்-4' திட்டத்தில் 2 ராக்கெட்டுகள் தனித்தனியாக ஏவிய பின்னர், பூமி சுற்றுப்பாதையில் அவற்றை இணைக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு, உந்துவிசை தொகுதி அடுத்து விண்கலத்தை நிலவு சுற்றுப்பாதையில் செலுத்தும். அங்கு பிரிந்த பிறகு, மீதம் உள்ள 2 தொகுதிகள் பிரிந்து நிலவு மேற்பரப்பில் தரையிறங்கி மாதிரிகளை சேகரிக்கும்.
தொகுதிகளில் ஒன்று நிலவு சுற்றுப்பாதையில் மீதமுள்ள தொகுதிகளுடன் இணைக்கப்படும். பின்னர் மறு நுழைவு தொகுதிக்கு நகர்த்தப்படும். இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும். இந்த பணிக்கு அதிக திறன் கொண்ட உந்துவிசை அமைப்பு, சிறப்பு ஆராய்ச்சி கருவிகள் மற்றும் மாதிரி சேகரிப்புக்கான ரோபோ கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியமாகிறது. இவை அனைத்திற்குமான பணிகள் நடந்து வருகின்றன.
சந்திரயான்-5 என்று அழைக்கப்படும் நிலவு துருவ ஆய்வு திட்டம் (லூபெக்ஸ்) இஸ்ரோ-ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டுப்பணி நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர் எந்திரத்தை உருவாக்க உள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கருவிகளைக் கொண்டு செல்லும். விண்கலத்தின் தாங்கும் சக்தி 6 ஆயிரத்து 200 கிலோவாக இருக்கும். அதே நேரத்தில் லூபெக்ஸ் ரோவர் 350-400 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதுவே சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
இதற்கான திட்ட கட்டமைப்பில் பூமி மற்றும் நிலவு சுற்றுப்பாதைகளில் பல இணைப்பு மற்றும் பிரிப்பு சோதனைகளும் செய்ய இருக்கிறோம். அதற்கான உள் அமைப்பு, வடிவமைப்புகளை முடித்துவிட்டோம். தற்போது பல்வேறு துணை அமைப்புகளின் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
- டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது- கெஜ்ரிவால்.
- மார்ச் 8-ந்தேதி டெல்லி பெண்களின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.
டெல்லியின் 4-வது பெண் முதல்வர் இவராவார். இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். தற்போது 4-வது பெண் முதல்வராக இன்று மதியம் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ரேகா குப்தா பதவி ஏற்பது குறித்து கூறியதாவது:-
டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியதாவது:-
டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ, அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது.
பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. சொன்னபடி மார்ச் 8-ந்தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
அவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.