search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஸ்ரீரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களின் வெற்றி சான்றிதழ் - ரங்கநாதரை தரிசிக்க குமாரசாமி வருகிறார்
    X

    ஸ்ரீரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களின் வெற்றி சான்றிதழ் - ரங்கநாதரை தரிசிக்க குமாரசாமி வருகிறார்

    கர்நாடக முதல்வராக வருகிற 23-ந்தேதி பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து தரிசிக்க உள்ளார். #KarnatakaElection2018 #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  நாளை டெல்லி சென்று அவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

    இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று  வருகை தர உள்ளார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக குமாரசாமியின் சகோதரர், தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களின் வேட்பாளர் பட்டியலை ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018 #Kumarasamy
    Next Story
    ×