search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார்
    X

    பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார்

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டுச்சென்றார். சீனாவில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசுகிறார். #Modi #PMModi
    புதுடெல்லி:

    ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால், இந்தியா என்னென்ன விஷயங்களை மாநாட்டில் முன்வைக்கப் போகிறது என்பது குறித்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உள்ள நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து, மோடி இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளித்து கருத்துகளை முன்வைப்பார் என்று தெரிகிறது. இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி இந்தப் பயணத்தின்போது சந்தித்துப் பேச இருக்கிறார்.

    அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹூசைனை அவர் சந்திக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

    சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். #Modi #PMModi
    Next Story
    ×