search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி - அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்
    X

    பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி - அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NiravModi #NiravInUK #NiravPoliticalAsylum
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.



    இதேபோல் விஜய் மல்லையாவையும் இந்தியாவிடம் ஒப்படைக்ககோரி லண்டனில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NiravModi #NiravInUK #NiravPoliticalAsylum
    Next Story
    ×