search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பழங்குடி சமூகத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
    X

    பழங்குடி சமூகத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற கணவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது தனோகி பகால் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தாரு காமேதி. இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    ஆனால், அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் தவறான உறவை ஏற்படுத்தி கொண்டார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பழங்குடி பஞ்சாயத்தினர் அவர்களை பிரித்து வைத்தனர்.

    இதனால் அந்த பெண் தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே காதலித்த வாலிபரை சந்திப்பதற்காக சரே கார்டு என்ற இடத்துக்கு சென்றார். அவர்கள் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த வி‌ஷயம் அவருடைய கணவர் தாரு காமேதிக்கு தெரிய வந்தது. மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் அவமானப்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

    ஊர்க்காரர்களை அழைத்து கொண்டு அந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை அவர்கள் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர்.

    பின்னர் இருவரின் கைகளை கட்டினார்கள். அவர்கள் ஆடையை களைந்து நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. இந்த காட்சியை பலர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருடைய கணவர் தாரு காமேதி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடம் மாநில உள்துறை மந்திரி குலாப்சந்த் கட்டாரியாவின் சொந்த ஊராகும்.

    இதே பகுதியில் 2016-ம் ஆண்டு காதல் ஜோடி ஒன்றை இதே போல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×