search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கும் சந்திரசேகரராவுக்கும் மோதல் ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார்- சந்திரபாபு நாயுடு
    X

    எனக்கும் சந்திரசேகரராவுக்கும் மோதல் ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார்- சந்திரபாபு நாயுடு

    பிரதமர் மோடி எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தெலுங்கு தேசம் செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக பேசினார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. அதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    “பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏனெனில் 2 தெலுங்கு மாநிலங்களுக்கும் மத்தியில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அநீதி இழைத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் முழு ஆதரவுடன் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அவற்றை பயன்படுத்தியது. ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் விரைவிலோ அல்லது பின்னரோ பயன்படுத்தும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தெலுங்கானாவில் தேசிய நீர்பாசன திட்டத்தை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது.

    தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டும் பா.ஜனதா அரசு அநீதி இழைக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் துரோகம் செய்துள்ளது.


    எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி மோதல் ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி தெலுங்கானா, தெலுங்கு தேசம் 2 அல்லது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தெலுங்கானாவில் போட்டியிட பல தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் போட்டியிட அனைவருக்கும் டிக்கெட் தர இயலாது.

    டிக்கெட் பெறுவதில் ஏற்பட்டுள்ள போட்டியை பார்க்கும் போது தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி பலமாக இருப்பதையே காட்டுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ரமணா பேசும் போது, “தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்பதை தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு தேசம் ஆதரவின்றி தெலுங்கானாவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.

    மேலும் அவர் பேசும் போது, தெலுங்கு தேசம் ஆந்திர மாநில கட்சி என சந்திரசேகரராவ் பேசியதற்கு பதில் அளித்தார். அப்போது “தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்துக்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அனைத்து மாநிலத்துக்கும் சொந்தமானது. சந்திரசேகரராவ் தனது அரசியல் வாழ்க்கையை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தான் தொடங்கினார்” என்றார்.

    முன்னதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசினார். அப்போது “தெலுங்கானாவில் பல சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டு வங்கி கணிசமான அளவில் உள்ளது” என்றார். #ChandrababuNaidu
    Next Story
    ×