search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான பெண்களை தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அதிகாரிகள்
    X

    திருமணமான பெண்களை தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அதிகாரிகள்

    தெலங்கானாவில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்பு கருதி பெண்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்களிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Telangana #TSPSC
    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TSPSC) சார்பில், கிராம வருவாய் அதிகாரிக்கான தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைப்பெற்றது.

    700 காலியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,000 தேர்வு மையங்களில் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களிடம், தங்களின் தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

    இந்துக்களின் பாரம்பர்யத்தை எடுத்துக்கூறி, அந்தப் பெண்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தனர். தேர்வாணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளின் படியே தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர். பின்னர், பெண்கள் தங்களின் தாலியைக் கழற்றிவிட்டே தேர்வு எழுதினர். 

    இதையடுத்து, தேர்வு மையத்தின் வெளியில் தங்கள் மனைவிகளின் தாலிச்செயினுடன் கணவன்மார்கள் போராட்டம் நடத்தினர். பெண்கள், தங்களின் தாலியில் சில எலெக்ட்ரானிக் டிவைஸ் வைத்திருக்கக்கூடும். அதன் உதவியுடன் தேர்வெழுதும் வாய்ப்புள்ளதால் தான் அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



    இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி இயக்குநர் சக்கரபாணி கூறும்போது, தேர்வு எழுத வரும் பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் விதிமுறைகளை தவறாகப் புரிந்துக்கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், இதுபோன்று செயல்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் நடந்த பிறகு, அதே தேர்வு மையத்தில் 290 திருமணமான பெண்கள் தாலியுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால், சிலர் வேண்டுமென்றே இதனை பெரியதாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். #Telangana #TSPSC

    Next Story
    ×