search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊசி மூலம் நரம்பில் காற்றை செலுத்தி காதலனின் மனைவியை கொல்ல முயன்ற பெண்
    X

    கைது செய்யப்பட்ட அனுஷா.

    ஊசி மூலம் நரம்பில் காற்றை செலுத்தி காதலனின் மனைவியை கொல்ல முயன்ற பெண்

    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.
    • காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சினேகா(வயது25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அங்கு சினேகாவுக்கு குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களாக சினேகாவும், அவரது குழந்தையும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களை குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர். பின்பு சினேகாவும், அவரது குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து சினேகாவின் குடும்பத்தினர் புறப்பட தயாராகினர். அப்போது பிறந்த குழந்தைக்கு சில பராமரிப்பு தேவைப்பட்டதால், செவிலியர்கள் கூறுவதை கேட்பதற்காக குழந்தையுடன் சினேகா மருத்துவமனையில், தான் தங்கியிருந்த அறையில் காத்திருந்தார்.

    அப்போது அங்கு நர்சு உடையணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் திடீரென சினேகாவின் கையை பிடித்து ஊசி போட முயன்றார். அவர் வைத்திருந்து சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா அதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    ஆனால் அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார். அப்போது அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அந்த பெண் அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரியும் அனுஷா(25) ஆவார்.

    காயங்குளத்தை சேர்ந்த அவர், சினேகாவின் உடலில் சிரிஞ்சு மூலம் காற்றை ஏற்றி கொல்லமுயற்சி செய்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக சினேகாவை கொல்ல முயன்றார்? என்று விசாரணை நடத்தினர். அதில் சினேகாவின் கணவர் அருணும், அனுஷாவும் நண்பர்கள் என்பதும், இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    குழந்தை பெற்ற பெண்ணை, மற்றொரு பெண் நர்சு வேடமிட்டு வந்து நரம்பில் காற்றை செலுத்தி கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×