search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அடடே... இது கொஞ்சம் புதுசா இருக்கே...! தோட்டத்தில் நடிகைகளின் படங்களை கட்டி தொங்க விட்ட விவசாயி
    X

    அடடே... இது கொஞ்சம் புதுசா இருக்கே...! தோட்டத்தில் நடிகைகளின் படங்களை கட்டி தொங்க விட்ட விவசாயி

    • நடிகைகளின் படங்களை சிறிய பேனர் போல் அச்சிட்டு தனது தோட்டத்தில் கம்புகளை நட்டு தொங்கவிட்டுள்ளார்.
    • வெள்ளரிக்காய் தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    ஊரு கண்ணு... உறவு கண்ணு... நல்ல கண்ணு... நொள்ள கண்ணு... என குழந்தைகளுக்கு தாய்மார்கள் கண்திருஷ்டி கழிப்பதை பார்த்து இருப்போம்.

    அதுபோல் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பயிர்களுக்கும் கண் திருஷ்டி படாமல் இருக்க பிய்ந்து போன துடைப்பம், காலணியை தொங்கவிடுவது வழக்கம்.

    பொதுவாக முருங்கைக்காய் அதிகம் விளையும் பட்சத்தில் கண்திருஷ்டி படக்கூடாது என்பதற்காக முருங்கை மரத்தில் பிய்ந்து போன துடைப்பம், காலணியை தொங்கவிடுவது பழங்காலம் தொட்டே நடைமுறையில் உள்ளது. அதுபோல் தோட்டங்களிலும் வெள்ளரிக்காய், கொய்யா பழம், நெல்லிக்கனி, தேங்காய் அதிகமாக விளைந்திருந்தாலும் இதே பாணியை விவசாயிகளும் கடைபிடிப்பது வாடிக்கையானது. மேலும் சோள காட்டு பொம்மையையும் வைப்பதும் நமக்கு தெரிந்த விஷயம்.

    இந்த வாடிக்கையிலும் வேடிக்கையான விஷயம் நம்ம கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. அதாவது வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயி, அதன் மீது கண்பட கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை கம்புகளில் கட்டி தொங்கவிட்டுள்ளார். அடடே... இது கொஞ்சம் புதுசா இருக்கே.. என தோன்றுகிறதா...



    ஆம்.... இந்த நூதன சிந்தனை கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா காரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு தோன்றியது. இதன் விளைவாக தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள வெள்ளரிக்காய் மீது கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை தொங்கவிட்டுள்ளார்.

    அதாவது ராதிகா பண்டிட், ராகிணி திவேதி, ராஸ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, சோனல் உள்ளிட்ட நடிகைகளின் படங்களை சிறிய பேனர் போல் அச்சிட்டு தனது தோட்டத்தில் கம்புகளை நட்டு தொங்கவிட்டுள்ளார். இவ்வாறு செய்தால் தோட்டத்திற்கு வருவோரின் கண்கள் வெள்ளரிக்காய் மீது படாமல், நடிகைகளை தான் பார்க்கும், இதன் மூலம் வெள்ளரிக்காய் மீது கண்திருஷ்டி படாமல் விளைச்சல் அதிகரித்து நல்ல மகசூல் கிடைக்கும் என அந்த விவசாயி கருதியதாகவும், அதனால் இந்த யோசனையை அவர் நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    தனது வெள்ளரிக்காய் தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×