search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா புதிய திட்டம்- அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்
    X

    சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா புதிய திட்டம்- அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்

    • அருணாச்சல பிரதேசத்தின் வி.வி.பி. என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கிறார்.
    • சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    சீன ராணுவம் கடந்த 1951-ம் ஆண்டில் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது முதல் இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை தொடங்கி நீடித்து வருகிறது.

    இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

    இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு கடந்த 4-ந்தேதி சீன அரசு புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

    இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதால் உண்மையை மாற்றிவிட முடியாது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    இந்திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    மேலும் இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் துடிப்பான கிராமங்கள் திட் டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக

    2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை ரூ.4800 கோடி செலவிடப்பட உள்ளது.

    சீனாவுடன் 14 நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த 14 நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லை பிரச்சினை நீடிக்கிறது. மேலும் தென் சீன கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இதன் காரணமாக சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.

    இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் திபெத்தை சேர்ந்த புத்த மதத்தினரின் மிக முக்கிய ஆன்மீக தலமான தவாங் புத்த மடாலயம் உள்ளது. எதிர்காலத்தில் தவாங் புத்த மடாலயத்தில் இருந்து சீனாவுக்கு எதிராக திபெத் புரட்சி வெடிக்க கூடும் என்று சீனா பயப்படுகிறது.

    மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதி பூடான் எல்லையில் அமைந்திருக்கிறது. அருணாச்சல பிரதேச பகுதிகளை சொந்தமாக்கினால் பூடானையும் எளிதாக ஆக்கிரமிக்கலாம் என்று சீனா கருதுகிறது.

    இதன்காரணமாகவே அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

    Next Story
    ×